செவ்வாய், 24 மே, 2016

அன்னையும் தந்தையும் தானே

தினம் ஒரு பாடல் - ஏப்ரல் 20, 2016

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை, 
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."

என்பது தமிழ் மக்கள் தொன்று தொட்டு வணங்கிக் கடைபிடிக்கும் நன்னெறியாகும். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் தாய் தந்தையரே கண்கண்ட தெய்வங்கள் என்பதை மறுப்போர் மானிடப் பிறவியாக இருப்பினும் மானிடர்க்குறிய அறிவை அடையாதவரே என்பதில் ஐயமில்லை. பத்து மாதம் தன் கருவில் சுமந்து, பல வித அல்லல்பட்டு அக்கருவைக் காத்து. மறு பிறவி என்று சொல்லுமளவுக்கு மரணத்தோடு போராடும் நிலையில் பிரசவ வேதனையை அனுபவித்து அரும்பாடு பட்டு அப்பிள்ளையைப் பெறுகிறாள் தாய். அத்தாய் கருவுற்றிருக்கும் காலம் முதல் பிள்ளை பிறந்து வளர்ந்து வாழும் காலம் முழுவதிலும்  அவளுக்கு  ஒரு  சுமைதாங்கியாக விளங்குவதோடு அவள் பெற்ற பிள்ளையை அறிவிற் சிறந்தவனாகத் தன் செல்வம் முழுவதையும் ஒரு சிறு தயக்கமுனின்றிச் செலவழித்து ஆளாக்கிக் காக்கிறான் தந்தை. 

ஒருவருக்குத் தன் தாய் தந்தை செய்த அளவு உபகாரம் செய்தோர் இவ்வுலகிலும் கிடையாது, ஈரேழு பதினாலு லோகங்களிலும் கிடையாது. தாய் தந்தையருக்கு அடுத்தபடியாக வணங்கிப் பணிய வேண்டியவர் குரு. அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பதால் குருவும் தாய் தந்தையர்க்கீடாகக் கருதி மரியாதை செய்யத் தக்கவரே என்பது சான்றோர் வகுத்த நெறி. தெய்வம் நமது கண்களுக்குத் தெரிவதில்லை, பிற புலன்களாலும் உணரப்படுவதில்லை, ஆனால் அறிவினால் அறியப்படுவது நிச்சயம். தெய்வத்தை அறிய மிகத் தெளிந்த சிந்தையும் பரந்த ஞானமும் அவசியம். அத்தகைய ஞானத்தை ஒருவருக்குத் தருவோர் தாய், தந்தை, குரு ஆகிய மூவருமே ஆவர். தெய்வம் நம்மையும் நம் தாய் தந்தையரையும் குருவையும் காப்பதனால் தெய்வத்துக்கு வந்தனம் செய்வது இன்றியமையாத கடமையாக வகுக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தியுள்ளனர் நம் அறிவிற் சார்ந்த முன்னோர்கள். கல்வி கற்றுத் தேறுவதோடு குருவின் தொடர்பு முடிந்து விடுகிறது. இடையிடையே குருவை வாழ்வில் சந்திக்க நேர்ந்தபோதும் எவரும் குருவுடன் தொடர்ந்து வாழ்நாளெல்லாம் வாழ்வதில்லை ஆனால் தாய் தந்தையரோடு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தே வாழ்கிறோம். சிலர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத் தாய் தந்தையரைப் பிரிந்து வாழ நேரிடினும் அவர்களுடன் எவ்விதத்திலாவது தொடர்பு வைத்து அவர்களோடு அளவளாவி மகிழ்தலே வாழ்வில் பெரும் மகிழ்ச்சிக்குரிய செயலாக நாம் கருதுகிறோம். 

ஒரு சிலர் தம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையருடன் சண்டையிட்டுக் கொண்டு மனைவியின் துர்ப்போதனையினாலோ பிறரது தூண்டுதலாலோ, சுயநலம் காரணமாகவோ பிரிந்து வாழ்வதுமல்லாமல் தாய் தந்தையருக்குரிய மரியாதையையும் செலுத்த மறந்து உன்மத்தராய் வாழ்கின்றனர். அத்தகைய வாழ்வும் ஒருவாழ்வா எனில் இல்லை என்பதே தீர்வு. தன் தாய் தந்தையருக்கு ஒருவன் உரிய மரியாதையளித்துப் பேணிக்காக்கத் தவறுகையில் அவன் வயது முதிர்ந்து உடல் நலம் குன்றி வாடும் காலத்தில் அவனுக்கு அவனது மக்களோ மற்றவரோ உதவுவது சாத்தியமில்லை. தாய் தந்தையரை மதியாதவனை உலகம் தூற்றும். அவனுடன் சேர்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி யாராகிலும் சேர்ந்து வாழ்ந்தாலும் அது அவனது செல்வளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இருக்கக்கூடுமேயன்றிப் பாசத்தினால் இருக்க இயலாது.

தாய் தந்தையரிடமிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் அன்பும் பாசமும் வேறு எந்த உயிரிடமிருந்தும் கிடைக்காது என்பது அறுதியிட்டு உறுதியாக நம் முன்னோர்கள் அனைவரும் உணர்ந்து உபதேசித்த உண்மைத் தத்துவமாகும். பெரும் புலவர்களும் இத்தத்துவத்தையே போதிக்கின்றனர். தாய் தந்தையரிடமிருந்து சொத்து சுகத்தை மட்டும் எதிர்பார்த்து வாழும் மனிதர்கள் அறிவு பெறாதவர்களே என்பதே உண்மை. தாய் தந்தையரின் ஆசி இருந்தால் இவ்வுலகையே தன் வசமாக்கிக் கொள்ளுமளவு அறிவும் திறனும், வாய்ப்பும் வசதியும் உருவாகும் என்பது நிச்சயம். அவர்களாக விருப்பப்பட்டு மனமுவந்து அளிக்கும் பொருளை மட்டுமே ஏற்றல் ஒருவருக்கு சிறப்பைத் தருவதாகும். அதை விடுத்து அவர்களை வயதான காலத்தில் சொத்து சுகத்திற்காக மன வருத்தம் கொள்ளச் செய்வது அருவருக்கத்தக்க செயலேயாகும்.

பொன்னும் பொருளும் சொத்தும் சுகமும் நிரந்தரமற்றவை ஆனால் தாய் தந்தையரின் அன்பும் ஆசியும் நித்தியமானவை. தாய் தந்தையர் தம் உடலை விட்டு உயிர் பிரிந்து இவ்வுலக வாழ்வைத் துறந்த பின்னரும் அவர்கள் வழங்கிய ஆசி நம்மைக் காக்கும். அவர்களது ஆசியால் வாழ்வில் வரும் எத்தகைய பெருந்துன்பத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் சக்தியை நாம் பெறுவோம். எனவே நாம் நம் வாழ்நாளுள்ள வரை நம் தாய் தந்தையரைப் பெரிதும் மதித்துப் போற்றி வணங்குவதுடன் நம்மாலியன்ற சேவைகளை அவர்களுக்குச் செய்வது அவசியம். அத்துடன் அவர்கள் இறந்த பின்னர் செய்ய வேண்டிய பித்ருக் கடன்களையும் முறைப்படி செய்வது அவசியம். அப்பொழுதுதான் அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்பது நம் முன்னோர் காட்டிய நெறி. அவ்வாறு செய்ய வேண்டிய ச்ராத்தம் முதலான பித்ருக் கடன்களைச் செய்வதைத் தவிர்த்து முதியோர் காப்பகங்களில் உள்ள முதியோருக்கு அன்னதானம் செய்கிறேன் என்பதும். எவருக்கேனும் பொருளுதவி செய்வதும் சோம்பேரித்தனமேயல்லாது தர்மமாகாது. தாய் தந்தையர் இவ்வுலகில் வாழும் வரை அவர்களுக்குரிய பணிவிடைகளைச் சிறிதும் குறையில்லாமல் செய்வதுடன் அவர்கள் இறந்த பிறகு செய்வதற்குரிய பித்ருக் கடன்களையும் செவ்வனே செய்தல் மிகவும் அவசியம்.

தாய் தந்தையர் உயிரோடிருக்கையில் அவர்களுக்கு சேவை செய்யாமல் அவர்கள் மேல் அன்பு செலுத்தாமல் அவர்கள் இறந்த பிறகு செய்யும் சடங்குகள் யாவும் வீணே.  எனவே அவர்கள் உயிரோடிருக்கையிலேயே அவரக்ள் மனம் குளிரும் விதத்தில் நடந்துகொண்டு அவர்களது ஆசியைப் பெறுதலே அறிவுடைமை ஆகும்.


திரைப்படம்: ஹரிதாஸ்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944

அன்னையும் தந்தையும் தானே பாரில்
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே

தாயினும் கோவிலிங்கேது
தாயினும் கோவிலிங்கேது ஈன்ற
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு
சேயின் கடன் அன்னை தொண்டு புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு

அன்னையும் தந்தையும் தானே

தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
தலை வணங்காதவன் - நாள் தவறாமல்
கோவிலில் சென்று என்ன காண்பான்? - நந்த
கோபாலன் வேண்டும் வரந்தருவானோ?

பொன்னுடல் தன் பொருள் பூமி
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டு
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது?
அன்னை பிதா இன்றி ஏது? - மரம்
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?

அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே தெய்வம்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நாடகமே இந்த உலகம்

தினம் ஒரு பாடல் - ஏப்ரல் 18, 2016

வாழ்க்கையெனும் நாடகத்தில் நம் ஒவ்வொருவரின் தகுதியையும் சோதிக்கிறான் இறைவன் என்பதை அறியாது அந்த இறைவன் பெயரைச் சொல்லியே ஊரை உலகை ஏமாற்றிப் பல லட்சம் கோடிப் பணத்தைச் சுருட்டி உள்நாட்டில் பல இடங்களில் அங்கும் இங்கும் ஒளித்து வைத்து, அப்படியும் இடம் பற்றாமால் அயல்நாட்டு வங்கிகளிலும் பதுக்கி வைத்து, சேர்த்த பணத்தில் ஒரு சிறிதளவும் உபயோகிக்காமலேயே எமலோகம் செல்லும் அற்ப மனிதர்கள் பலரைப் பற்றிய செய்திகளை நாள்தோறும் அறிகிறோம். 

இத்தகைய மோசடிப் பேர்வழிகள் பலரும் தங்கள் தலைவராகவும், கண்கண்ட தெய்வமாகவும், ஆத்மார்த்தமான குருவாகவும் வணங்குவதாகச் சொல்வது தன்னலம் சிறிதுமின்றி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வாழ்ந்து காட்டிய மஹாத்மா காந்தி, ஸ்வாமி விவேகானந்தர், அண்ணல் அம்பேத்கார், வல்லப்பாய் படேல் போன்ற உத்தமர்களையே என்பதை எண்ணிப் பார்க்கையில் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அதையும் மக்களில் ஒரு பகுதியினர் நம்புவதை அறிகையில் வேதனை கூடுகிறது. தேசத்துக்காகவும் மனித குலம் முழுமைக்காகவும் தம் வாழ்வையே ஈந்து தமக்கென வாழாப் பிறர்க்குரியராக விளங்கும் அத்தகைய உத்தமர்களின் பெயர்களைக் களங்கப் படுத்துவது மிகவும் கேவலமான செயலாகும். உண்மை என்றாவதொரு நாள் வெளியாகும் என்பது இயற்கை நியதி என்பதைக் கண்ணாரக் கண்டும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் திருந்துவதில்லை, மனம் வருந்துவதுமில்லை. அது மட்டுமின்றித் திருடன் என்று உலகமே அறிந்த பின்பும் உத்தமர் வேடம் போடப் பெரும் முயற்சி செய்கின்றனர். நான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசமாக இதைத் தருவேன், அதைத் தருவேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் சொல்லி, மக்களின் ஏழ்மையைப் பகடைக் காய்களாய் உபயோகித்து மீண்டும் மீண்டும் தாங்கள் செய்து மாட்டிக்கொண்ட குற்றங்களையே செய்து மக்களை மேலும் மேலும் அவதிக்குள்ளாக்கும் செயலில் சிறிதும் தயக்கமின்றி ஈடுபடுவதை நினைக்கையில் மக்கள் மேலேயே கோபம் வருகிறது. திரும்பத் திரும்ப இத்தகைய மோசடிப் பேர்வழிகளையே நாடாளத் தேர்ந்தெடுக்கும் மக்களில் பெரும்பாலோரின் மடமையை எண்ணி வருத்தம் மேலிடுகிறது.

நம் நாட்டையும் நமது வருங்கால சந்ததியினரையும் இத்தகைய கொடியவர்களிடமிருந்து காக்க வழியே இல்லையா எனும் ஏக்கம் மேலிடுகிற சமயத்தில் நம் நாட்டு இளைஞர்கள் பெரும் விழிப்புணர்வுடன் எழுந்து நின்று ஊழலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிவையும், வெள்ளத்தாலும் வேறு பல காரணங்களாலும் அவதியுறும் மக்களுக்கு ஓடோடிச் சென்று பேருதவிகள் புரிவதையும், தொடர்ந்து இரத்ததானம் முதலிய நற்செயல்களில் ஈடுபடுவதையும் அறிந்து மனம் சற்றே ஆறுதலடைகிறாது., ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்துப் பல கல்வியறிவுமிக்க நேர்மையான. சமூக அக்கரையுடன் சேவை செய்யும் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட முன்வருவது கண்டு நம் நாடு பிழைத்து விடும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. 

மிருகங்கள் அவற்றின் இயற்கை குணத்தையே வெளிப்படுத்துகையில் மனிதன் மட்டும் தன் இயற்கை குணங்களை மறைத்து வேஷம் போட்டு ஊரை, உலகை ஏமாற்றுவதில் சாமர்த்தியம் காட்டுகிறான் என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் பிறருடன் பழகுவதில் எச்சரிக்கையாக இருப்பது அனைவருக்கும் உகந்ததாகும். அவசரப்பட்டு உண்மையைக் கண்டறிய முயற்சிகள் செய்யாமல் வெறும் பத்திரிக்கை செய்திகளையும் தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் உண்மையென்று நம்பித் தலைவர்களாகும் தகுதி சிறிதுமில்லாதோரைத் தலைவர்களாக ஏற்பதைக் காட்டிலும் மடமை வேறில்லை. இறைவன் நமக்களித்த அறிவையும், நேரத்தையும் உபயோகித்து யார் எப்படிப் பட்டவர் எனும் விவரங்களைத் தேடியறிந்து தெளிந்த பின்னரே எந்த ஒரு மனிதரையும் தலைவராக ஏற்பது, அல்லது மக்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்வது அறிவுடைமை. 

நாட்டை ஆளும் தலைவர்கள் தகுதிமிக்கவர்களாக இருக்கின்றனர் என்றால் ஏன் நாட்டில் சாதி மதச் சண்டைகளும், கொலை கொள்ளைகளும் பெருகுகின்றன? விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக்கொண்டே போவது ஏன்? காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டு ஆற்று மணல் சுரண்டப் பட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மண்ணில் வாகனங்களக் கோடானு கோடிக் கணக்கில் உற்பத்தி செய்து விற்றுக் காற்றையும் மாசுபடுத்தி வருவதை அனுமதிப்பது ஏன்? ஏன் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன? ஏன் விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது? ஏன் புதிது புதிதாக வரிகள் மக்களின் மேல் சுமத்தப் படுகின்றன? ஏன் அரசு நிறுவனங்கள் மட்டும் நஷடத்தில் இயங்குகின்றன? ஏன் தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் இயங்குகின்றன? ஏன் நஷ்டத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நம் நாட்டு வங்கிகள் வாரி வழங்குகின்றன? வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத மோசடிப் பெருமுதலாளிகள் மிக எளிதாக அயல் நாடுகளுக்குத் தப்பியோட விடுவது ஏன்?

இன்னும் எண்ணிறந்த கேள்விகள் இருப்பினும் ஒன்றுக்கும் உரிய பதிலையளிக்க அத்தகைய பதிலளிக்கும் கடமையைச் செய்ய வேண்டிய தலைவர்கள் பதிலளிப்பதில்லை. மாறாகத் தம் தவறை நியாயப் படுத்தவே முயல்கின்றனர். தம் எதிரிகள் அதே தவறைச் செய்தனரே, அவர்களை ஏன் கேட்பதில்லை என்று பதில் கேள்வி கேட்கின்றனர். அப்படியானால் எதிரிகள் குற்றங்களைச் செய்தால் அதே குற்றங்களைத் தாங்களும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் எனும் மனோபாவம் வளர்ந்து விட்டதென்பதே நாம் அறிய வேண்டியது. 

நம் இளையதலைமுறையினர் இவர்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளி நம் நாடு வளம் பெறவும், இயற்கை விவசாயம் சிறக்கவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பல உற்பத்தித் தொழில்கள் பெருகவும், படித்த படிக்காத அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாத்து மிகைப்படுத்தவும், அந்நிய நிறுவனங்களை அகற்றி இந்தியர்களே இந்தியாவில் தொழில்களை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வழிகள் காண்பதுவும், ஏற்றுமதியைப் பெருக்கி நாட்டின் செல்வத்தை உயர்த்தவும் எனப் புதிய பாதையில் மும்முரமாகத் தங்கள் அரசியல், சமுதாய சீர்திருத்தப் பயணத்தைத் தொடங்கியிருப்பது கண்டு பெருமையாக உள்ளது. 



திரைப்படம்: சாது மிரண்டால்
இயற்றியவர்: தஞ்சைவாணன்
இசை: மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி
குரல்கள்: பி. சுசீலா, ஏ.எல். ராகவன், குழுவினர்

பாடல் வரிகள்

ஓஹ் வாட் எ ட்ராஜெடி ட்ராஜெடி காமெடி காமெடி ட்ராஜெடி 
ட்ராஜெடி காமெடி வாட் எ பிட்டி!

ஆஹாஹா அஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா அஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா 
ஆஹாஹா அஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா ஹாஹ ஹஹ்ஹ ஹஹ்ஹ ஹா

ஓஹோஹோஹோ வாட் எ ட்ராஜெடி காமெடி  ட்ராஜெடி காமெடி  
ட்ராஜெடி காமெடி ட்ராஜெடி வாட் எ பிட்டி!

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்
இன்ப துன்பம் மாறி மாறி நடமாடிடும்
நன்மை தீமை போட்டி போட்டு விளையாடிடும்

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

ஓடி ஆடிக் காசைச் சேரு கையினிலே
ஒசந்த மனுஷன் ஆகிடலாம் நிமிஷத்திலே
தேடி நாடி உறவு வரும் அருகினிலே
தெரிஞ்சிக்கலாம் ஜோசியரே முடிவினிலே

பொம்மனாக வந்து வந்து பழகிடுவான்
அன்பு பாசம் என்று சொல்லிக் குலவிடுவான்
துன்பம் வர்ர போது தூர விலகிடுவான்
பண்பில்லாமல் ஊரினிலே உலவிடுவான்

ஓஹோஹோஹோ வாட் எ ட்ராஜெடி காமெடி  ட்ராஜெடி காமெடி  
ட்ராஜெடி காமெடி ட்ராஜெடி வாட் எ பிட்டி!

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

ஓய் டிடீஈ ஓய் டிடீஈ ஓய் டிடீஈ டீஈ டிஈ
ஓய் டிடீஈ ஓய் டிடீஈ 
டிடீடிடி டிடிடிடி டீ

உறங்கும் போது மனுஷன் ரொம்ப நல்லவனே
முளிச்சுக்கிட்டா அம்மாடியோ கெட்டவனே
வழியை விட்டுக் குறுக்கு வழியில் இறங்கிடுவான்
வெந்து வந்து வந்த வழியில் சேர்ந்திடுவான்

இரவினிலே குரங்குகடா பெருச்சாளி
எப்பொழுதும் உறங்கிடுவாம் சோமாறி
வாழ்ந்திடவே பயப்படுவான் சம்சாரி
வாழ்க்கை ரொம்ப டிஃபிகல்ட் ஐயம் சோ சாரி

ஓஹோஹோஹோ வாட் எ ட்ராஜெடி காமெடி  ட்ராஜெடி காமெடி  
ட்ராஜெடி காமெடி ட்ராஜெடி வாட் எ பிட்டி!

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

விருப்பத்தோடு செய்வதுவோ கல்யாணம்
வெறுத்தவுடன் வாங்குவதோ சந்நியாசம்
இருப்பதுவோ கொஞ்ச நாளு மண் மேலே
அதுக்குள்ளே ஆட்டத்துக்கோர் அளவில்லே

காலம் நேரம் நம்மைத் தேடி வரும்போது
யாரும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது
போதுமென்ற மனது மட்டும் வந்துவிட்டால்
பூமியையே சொர்க்கமாக மாற்றிடலாம்

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்
இன்ப துன்பம் மாறி மாறி நடமாடிடும்
நன்மை தீமை போட்டி போட்டு விளையாடிடும்

நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம்

திங்கள், 7 மார்ச், 2016

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்

தினம் ஒரு பாடல் மார்ச் 06, 2016

ஆதிமனிதன் காடுகளில் விலங்குகளோடு தானும் ஒரு விலங்காக இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்தான். மலைக் குகைகளிலும், மரங்களின் மேலும் வனத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சிறு கூடு போன்ற வீட்டை அமைத்துக் கொண்டு குளிர், வெய்யில் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். இயற்கையாக விளையும் காய்கறிகளையும் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வாழ்ந்தான். மனிதர்களில் ஒரு பகுதியினர் விலங்குகளைக் கொன்று மாமிச உணவும் அருந்தி வாழ்ந்தனர். எந்த மனிதனுக்கும் பெரிய சொத்து சுகம் என்று அன்று இருக்கவில்லை. இருப்பினும் அவன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். மனிதர்களில் பலர் இறை வழிபாட்டில் ஈடுபடுவதைத் தம் வழக்கமாகக் கொண்டிருந்தனர். சூரியனையும், நிலவையும், விண் மீன்களையும் தெய்வங்களாகப் போற்றி வணங்கி உலக நலனுக்காகப் பிரார்த்தனை செய்தனர். நாளடைவில் பொருட்களை உருவாக்கக் கற்றுக்கொண்டு தெய்வங்களுக்கு உருவங்களைப் படைத்து தெய்வங்களும் குடும்ப வாழ்க்கை வாழ்வதாகத் தன் மனதில் தோன்றும் காட்சிகளைக் கொண்டு பல விதப் புராணக் கதைகளைப் புனைந்தனர். அவ்வாறு இறைவழிபாட்டில் முழுக்கவனமும் செலுத்திய மனிதர்களே நாளடைவில் ரிஷிகள் என்றும் முனிவர்கள் என்றும் போற்றப்பட்டனர்.

வேதவியாசர் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைத் தொகுத்து உலகுக்குத் தந்தவர். அவரே மஹாபாரத காவியத்தையும் இயற்றினார். மஹாபாரதம் விநாயகக் கடவுளால் வியாசர் சொல்லி எழுதப் பட்டது என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள். வியாசர் வாழ்ந்த காலத்திலேயே மஹாபாரதக் கதை உண்மையில் நடந்த இந்தியாவின் பழம் வரலாறு என்பது கதையில் வரும் பாத்திரங்கள் வியாசரைப் பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசியதும் பழகியதும் கதையில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து தெரிய வருகிறது. மேலும் பல விவரங்கள், வியாசர் இடம்பெறும் காட்சிகள் மஹாபாரதத்தில் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளன. 

மனிதர்கள் அன்று இயற்கையை வணங்கினர், வாயு, வருணன், அக்கினி, அஸ்வினி தேவர்கள் ஆகியோரை முறையே காற்றுத் தெய்வம், மழைத் தெய்வம், நெருப்புத் தெய்வம், நட்சத்திரத் தெய்வங்கள் என்று கருதி வழிபட்டனர். வன விலங்குகளையும் பறவைகளையும் நேசித்தனர், பாதுகாத்தனர். ஒரு பகுதியினர் மிருகங்களையும் பறவைகளையும் கொன்று தின்று மாமிச போஜனம் செய்து வந்திருந்த போதிலும் அனேகமாக அனைவரும் மிருகங்களையும் பறவைகளையும், பிற உயிரினங்களையும் தம் நட்புறவுகளாகவே கண்டனர். பறவைகள் சுதந்திரமாகப் பறந்து திரிவதையும் ஆண் பெண் பறவைகள் காதல் உறவு கொண்டு களித்திருப்பதையும் கண்டு மகிழ்ந்தனர். பறவைகள் போல் தாமும் சுகமாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.  அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களை நாகரீகம் அடையாதவர்களாக நாம் கருத்கிறோம். அதே நேரத்தில் நம் நாகரீகத்தின் தன்மை என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாகரீகம் வளர்ந்த இந்நாளில் நாம் இயற்கை வளங்களை அழிக்கிறோம். விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் அதிகமாகக் கொன்று தின்கிறோம். நாம் தின்பது மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்து வணிகம் செய்கிறோம். கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டிடங்களைக் கட்டி அவற்றுக்குள் பதுங்கிக் கொள்கிறோம். தனக்கு தனக்கு என்று பெரும் பொருள் சேர்த்து வங்கிகளிலும் நகைகளாகவும், பல மாளிகைகளாகவும், தோட்டங்களாகவும் சேர்த்து செல்வச் செழிப்புடன் ஆடம்பர வாழ்வு வாழ்வதில் மிகவும் முனைப்பாக இருக்கிறோம். இத்தகைய ஆசை தொற்று நோய் போல் அதிகபட்ச மனிதர்களிடையே பரவி அனைவரும் ஆட்டுக் கூட்டம் போல் அறிவிழந்து அழிவுப் பாதையிலேயே செல்கின்றனர். இயற்கையை அழித்து விட்ட பின் உணவு கிடைக்காது என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. மரங்கள் இல்லாவிடில் மழை பொழியாது, காற்றில் பிராணவாயு சேராது என்பதையும் எண்ணிப் பார்ப்பதில்லை.

இயற்கையைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். நாம் நம் வீடுகளில் கூடிய வரையில் மரங்களையும் செடி கொடிகளையும் வளர்க்க வேண்டும். முடிந்தால் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க வேண்டும். அவற்றில் இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களையே பயிரிட வேண்டும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்ற விதைகளை உபயோகிக்கக் கூடாது. அவை நமக்கும் கெடுதி. பிற பயிர்களுக்கும் கெடுதி என்பதை அறிய வேண்டும். அத்துடன் பறவைகளுக்கு உணவளிக்கவும், தாகத்துக்கு நீர் தரவும் பறவைக் கூடுகளை வீடுகளில் தகுந்த இடங்களில் அமைக்க வேண்டும். சென்னையில் ஒரு வீட்டில் வசிக்கும் அன்பர் தினமும் கிளிகளுக்காகவென்றே உணவு சமைத்து மொட்டை மாடியில் நெடுகப் பரப்பி வைக்கிறார். ஆயிரக்கணக்கான கிளிகள் தினம் தோறும் வந்து அவ்வுணவை உண்டு மகிழ்வது அந்தப்பகுதியிலிருக்கும் அனைவருக்கும் கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்து வருகிறது.

சில மனிதர்கள் மிருகங்களை சிறைபிடித்து மிருகக் காட்சி சாலை அமைக்கின்றனர். சர்க்கஸ் விளையாட்டுக்களில் அவ்வாறு சிறை பிடித்த மிருகங்களை உபயோகப் படுத்துகின்றனர். அம்மிருகங்கள் இரும்புக் கூண்டுக்ளுக்குள் அடைபட்டு வதைபடுகின்றன. பறவைகளைப் பிடித்துக் கூண்டுகளில் அடைத்து வீட்டுக்குள்ளே காட்சிப் பொருளாக்கி வைக்கின்றனர். அப்பறவைகளுக்கு உணவளிப்பதும் அவற்றின் குரல் கேட்டு மகிழ்வதும் பலருக்குப் பொழுது போக்காவி விட்டது. அவற்றின் சுதந்திரத்தைப் பறிக்கிறோமே, அது தவறல்லவா எனும் எண்ணம் சிறிதும் அவர்களுக்கில்லை.

இன்றைய பாடலின் கதாநயாகி கூண்டில் அடைக்கப்பட்ட காதல் பறவைகளைக் கொஞ்சி மகிழ்கிறாள். அவற்றின் காதல் வாழ்க்கையைத் தன் காதல் மனதுக்குள் எண்ணி அவ்வெண்ணங்களைப் பாடலாகப் பாடுகிறாள். பாட்டு இனிமையாகவே இருக்கிறது. பறவைகள் சுதந்திரம் பறிபோனது குறித்த ஓரே ஒரு கவலை மட்டும் மிஞ்சிகிறது.


திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: பி. சுசீலா
ஆண்டு: 1966

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா

காதில் மெல்ல காதல் சொல்ல

காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
சச்ச சச்ச சா அந்தக் காலம் வந்தாச்சா?
அச்ச சச்ச சசசா அந்தக் காலம் வந்தாச்சா?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா

கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு
பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாடக்
காற்றில் வந்தது ஓசை

ஓஹோஹோஹோ ஆசை
ஓஹோ ஹோஹோஹோஹோ ஓசை

கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு
பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாடக்
காற்றில் வந்தது ஓசை
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன?
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா

சிட்டுக்குருவி தொட்டுப் பழகி சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி வெட்கம் வந்து பட்டுச் சிறகை மூடும்

ஓஹோஹோஹோ ஓஹோ
ஓஹோ ஹோஹோஹோஹோ ஓஹோ

சிட்டுக்குருவி தொட்டுப் பழகி சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி வெட்கம் வந்து பட்டுச் சிறகை மூடும்
காதல் பறவைகளே ஒன்றாகக் கொஞ்சும் நேரத்தில் நீங்கள்
கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ?
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா

காதில் மெல்ல காதல் சொல்ல
சச்ச சச்ச சா அந்தக் காலம் வந்தாச்சா?
அச்ச சச்ச சசசா அந்தக் காலம் வந்தாச்சா?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா

ஞாயிறு, 6 மார்ச், 2016

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

தினம் ஒரு பாடல் 2016 மார்ச் 5

வாழ்க்கை என்பது என்னவென்றே புரியாமல் மனித இனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. நாம் காணும் பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும் பிற உயிர்களும் ஒவ்வொன்றாக மறைந்து போகின்றன. நம் மனதுக்குப் பிடித்த செல்வங்களைச் சந்தர்ப்பவசத்தால் இழக்க நேரிடுகிறது. நமக்குப் பிரியமானவர்கள் நம்மை விட்டும் இவ்வுலகை விட்டும் எதிர்பாராமல் சென்று விடுகின்றனர். நாம் வெகுகாலம் கனவு கண்ட ஒளிமயமான எதிர்காலம் வெகு தொலைவில் எட்டாத தூரத்தில் இருப்பது போல் தோன்றுகிறது. அரிய வாய்ப்புக்கள் நம்மைத் தேடி வருவது போல் வந்து கை நழுவி விடுகின்றன. இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளால் மனம் குழம்பி வருத்தமடைய நேரிடுகிறது. நம்மிற் பலர் இத்தகைய ஏமாற்றங்களால் மனமுடைந்து வாழ்வையே வெறுக்கும் நிலைக்கும் வருகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். 

இத்தகைய மனச் சோர்வு ஏற்படக் காரணம் நாம் இவ்வுலகில் அழியும் பொருட்களின் மேல் கொள்ளும் பற்றும் நமது செயலில் ஏற்படும் தவறுகளைப் பெரிதாக எண்ணி மலைக்கும் ஆணவமுமேயாகும். இந்த உலகில் எந்தச் செயலுமே நம்மைக் கேட்டு நடப்பதில்லை. நம்மைக் கேட்டு நாம் பிறக்கவில்லை. பூமி நம்மைக் கேட்டுச் சுழலவில்லை. செடி கொடிகள், மரங்கள் முதலியவை நம்மைக் கேட்டு வளர்வதில்லை. இறக்கும் ஜீவர்கள் நம்மிடம் சொல்லிக் கொண்டு இறப்பதில்லை. எதுவுமே நம் கையில் இல்லாத பொழுது எதற்கும் நாம் ஏன் பொறுப்பேற்க வேண்டும். நாம் செய்யத் தக்கதை, நமக்கு இடப்பட்ட பணியை நாம் முழு மனத்துடன் அக்கரையாகத் திறம்படச் செய்ய முயல்வதொன்றே நம் கடமையாகும். செய்யும் செயலின் விளைவுகளில் நமக்கு அதிகாரமில்லை. வெற்றியும் தோல்வியும் விதிவசத்தால் விளைகின்றன. நான் நன்றாகவே படித்தேன், நன்றாகவே பரீட்சை எழுதினேன், இருந்த போதிலும் தேறவில்லை எனும் நிலையில் சில மாணவர்கள் தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலங்கள் ஏற்படக் காரணம் வாழ்வை அவர்கள் உள்ளபடி உணரவில்லை என்பதேயாகும்.

வாழ்க்கை என்பது உலகில் பிறந்த ஜீவர்கள் யாவருக்கும் விதிக்கப்பட்ட கடமை. அதனைத் திறம்படச் செய்வதே நம் திறமை. வெற்றிகள் வருகையில் ஆர்ப்பரிப்பதும் தோல்வி காண்கையில் துவண்டு போவதும் அறியாமை. வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதி நடந்ததை மறந்து அடுத்துச் செய்ய வேண்டிய காரியத்தில் கவனம் செலுத்துவதே அறிவுடைமையாகும். அவ்வாறில்லாமல் இழப்புகளால் மனம் பேதலித்து விரக்தியுற்று வருந்துவதும் வாழ்வை வெறுப்பதும் நமது பலவீனமே என்பது சான்றோர் நமக்கு அறிவுறுத்திய முக்கியமான பாடமாகும். நம் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் தம் மரணத்தை எந்த நொடியிலும் எதிர்பார்த்த வண்ணமே கடமையாற்றுகின்றனர். அச்சமின்றித் தம் உயிரைத் துச்சமென மதித்து தேச சேவையில் நமக்காகக் குளிர் நடுக்கும் பனி மலைகளிலும் கொடும் வெயில் வாட்டும் வன வனாந்தரங்களிலும் பாதையே இல்லாத பல நிலப் பரப்புகளிலும் வான் வெளியிலும் கடலிலும் என அயராது பயணித்து நாட்டு மக்களுக்காக உழைக்கின்றனர். அவர்கள் போன்ற மனத் திண்மையுள்ளவர்களைக் கண்டு நாமும் நம் மனதையும் உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம் நமது குறிக்கோள்களை அடைய முடியும். மனம் பேதலித்தல் கோழைத்தனம்.

அவ்வாறு மனம் பேதலிக்கையில் நமக்கு ஆறுதல் கூறவும் தைரியமூட்டவும் எப்பொழுதும் நம் உற்றார் உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் மற்றும் பிறர் உதவுவர் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவரவர் கவலைகளே அவரவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதால் பிறரது நலத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்வோரே இவ்வுலகில் அதிகப்படியானோர் ஆவர். அந்தக் குறையைத் தீர்க்கவென்றே நமக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைவது இசையும் பாடல்களும். இசையால் மனது இசைந்து இலகுவாகிறது. மனதின் பாரங்களை இறக்கி வைத்தது போன்ற ஆறுதல் நிலையை இசை நமக்குத் தருகிறது. முன்பொரு சமயம் சென்னையில் ஒருவர் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளால் துவண்டு போன மனத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கையில் அவர் காதுகளில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய, "மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?" எனும் பாடல் எங்கிருந்தோ ஒலித்தது கேட்டதனால் அவர் அப்பாட்டில் தன் மனதைப் பறிகொடுத்த நிலையில் தைரியமடைந்து வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் துணிவு பெற்றுத் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டார் என்பது உண்மைச் செய்தி.

கண்ணதாசன் மட்டுமின்றி அவருக்கு முன்னர் வாழ்ந்த புலவர்களும் கவிஞர்களும் இத்தகைய அரிய தத்துவப் பாடல்கள் எண்ணிறந்தவற்றை இயற்றி நமக்களித்துள்ளனர்.

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

என வீர முழ்க்கம் செய்து தமிழ் மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டி உயிரைத் துச்சமென மதித்துப்ப் போராடத் தூண்டி ஆங்கியேயர் நம் நாட்டை விட்டோடப் பாடினார் பாரதியார். அதே இலட்சியப் பாதையில் கண்ணதாசனுக்குப் பின் வந்த கவிஞர் முத்துலிங்கம் இயற்றி இசை ஞானி இளையராஜா இசையமைத்துப் பாடிய பாடல் இன்றைய பாடலாக இடம் பெறுகிறது.


திரைப்படம்: வாழ்க்கை
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: இசை ஞானி இளையராஜா
குரல்: இளையராஜா
ஆண்டு: 1984

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ?

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

வாராத செல்வங்கள் வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே
இல்லாமல் போனாலே ஏழையும் ஆனாலே
தன் தேக நிழல் கூடப் பகையாகுமே
தன் கையே வாழுமே தக்க துணையாகுமே
தன் கையே வாழுமே தக்க துணையாகுமே
இருள் போனால் ஒளியாகும்
மரமே பழுத்தால் பறவைகள் கிளையில் காணுமே

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

நாட்டுக்கு நாள் தோறும் உழைத்திடும் நல்லோரை
எல்லோரும் மலர் தூவிக் கொண்டாடுவார்
எந்நாளும் தேயாத காவியக் கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில் உயிர் வாழுவார்
தெய்வீகம் என்பது அன்பு செய்து வாழ்வது
தெய்வீகம் என்பது அன்பு செய்து வாழ்வது
விதையாகி விழும் போது
பயிராய் கதிராய் உலகினில் அறங்கள் தழைக்குமே

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ?

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

கண்ணுக்கு குலமேது?

தினம் ஒரு பாடல் - 18 பிப்பிரவரி 2016

அரசியல் என்பது ஒரு சாக்கடை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அவ்வாறே நடைமுறையில் உள்ளது என்பதை அறிந்தால் நாம் எளிதில் நம்ப மாட்டோம் ஆனால் உண்மை அதுவேயாகும். உலக அரசியல் இந்திய அரசியலை விடவும் மிகவும் மோசமான பாதையில் செல்கிறது. மனித உயிர்களை வைத்து விளையாடுகின்றனர் அரசியல்வாதிகளும் அவர்களது ஊழல்களுக்கு உறுதுணையாய் நின்று உலக மக்கள் கடுமையாய் உழைத்து ஈட்டிய பொன் பொருளைக் கொள்ளையடிக்கும் வர்த்தக நிறுவனங்களும். மருந்துகள் எனும் பெயரில் விஷத்தை மனிதர்களின் உடலுக்குள் செலுத்தி வியாதிகள் வரச் செய்து பல தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளுகின்றனர். இதற்கு வசதியாகவே அரசு மருத்துவ மனைகள் போதிய மருத்துவ வசதியோ, மருத்துவர்களோ, உரிய மருந்துகளோ, முறையான நடைமுறையோ இல்லாது செயல்படும் நிலையை உருவாக்குகின்றனர் அரசியல்வாதிகள். அரசு மருத்துவ மனையில் சேர்ந்தால் உயிர் பிழைப்பது நிச்சயமல்ல எனத் தெரிகின்ற நிலையில் மக்கள் வேறு வழியின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தனியார் மருத்துவ மனைகளை நாடுகின்றனர். முக்காலே மூணு வீசம் தனியார் மருத்துவ மனைகளில் வசூலிக்கும் கட்டணம் சாமான்ய மக்களால் செலுத்த இயலாத அளவுக்கு அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பலர் போதிய மருத்துவ உதவி பெற இயலாத நிலையில் உயிர் விடும் கொடுமைகள் தினந்தோறும் நடந்து கொண்டிருந்த போதிலும் அதைப் பற்றி எந்த செய்தி நிறுவனங்களும் போதிய அக்கரை செலுத்தாமையால் மருத்துவத் துறையில் நிகழும் அநீதிகள் மக்களுக்குத் தெரியாமலே போய் விடுகின்றன.

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டி மக்களிடம் வீட்டு வரி, சாலை வரி, குடிநீர் வரி, சுகாதார வரி எனப் பலவித வரிகளைத் தொடர்ந்து வசூல் செய்து சேர்த்த நிதியை அதற்குரிய பணியில் செலவிடாமல் குப்பை கூளங்கள் தெருக்களெங்கும் கொட்டிக் கிடக்க, சாக்கடைகள் அடைபட்டிருக்க, குடிநீருடன் சாக்கடை கலக்க, ஆற்று மணல் கொள்ளை போகவும் ஆற்று நீர் வற்றவும், ஆற்று நீரில் ஆலைக் கழிவு நீர் தடையின்றிக் கழிக்கவும் வகை செய்து மக்களின் வரிப்பணத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டு மேலும் நோய் நொடிகள் பரவ வகை செய்து அவ்வழியிலும் தனியார் மருத்துவ மனைகளையே மக்கள் மீண்டும் மீண்டும் நாடிச் செல்லும் நிலையை உருவாக்கும் விதத்திலேயே மாநில மத்திய அரசுகள் செயல்படுகின்றன. பலவிதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப் பட்டாலும் அவற்றில் எவையும் நிறைவேற்றப் படுவதில்லை. மாறாகத் தேர்தல் வருகின்ற சமயத்தில் இலவசத் தொலைக்காட்சி, இலவச மிக்சி, இலவச மடிக்கணிணி, இலவசக் குடிநீர், இலவச மருந்துகள் எனப் பலவிதமாக மக்கள் உயிர்வாழ இலவசங்களை நம்பும் நிலைக்கு அனைவரையும் பிச்சைக் காரர்களை விடவும் கேவலமான நிலையில் வைத்து அவர்களது பொன்னான வாக்குகளை விலைக்கு வாங்கி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் எவ்வாறாயினும் அமர்ந்து விடுகின்றனர் ஊழல் அரசியல்வாதிகள். மக்களும் வேறு மாற்றில்லாமையால் மாறி மாறி ஊழல் அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் வைக்கப்பட்டு வாழ வழி தெரியாமல் உழல்கின்றனர். ஏதோ தங்கள் அப்பன் பாட்டன் சேர்த்து வைத்த பரம்பரைச் சொத்துக்களிலிருந்து தானதருமம் வாரி வழங்குகிற பாவனையில் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப் பணத்தின் ஒரு பகுதியை இலவசங்களுக்குச் செலவழித்து வள்ளல்கள் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திக்கொண்டு காசுக்கு ஜே போடும் கூட்டமொன்றின் துணையுடன் பவனி வருகின்றனர் ஊழல் அரசியல்வாதிகள். 

மக்கள் ஒற்றுமையாக இருக்க இயலாத நிலையையும் சாதி மத பேதங்களைத் தூண்டிவிட்டு உருவாக்கி விடுகின்றனர் நம் அரசியல்வாதிகள். அதனால் மக்கள் சிதறுண்டு கிடக்கையில் காசுக்கு ஓட்டுக்கள் வாங்குவது அரசியல்வாதிகளுக்கு எளிதாய் விடுகிறது. இதனுடன் சாராயமும் தண்ணீர் போலத் தாராளமாக அரசாங்கத்தாலேயே விற்கப்படுகிறது நம் தமிழ்த் திரு நாட்டில். பொழுது விடிந்தவுடன் கால்கள் தாமாகவே நம் குடிமக்களை சாராயக் கடைகளுக்கு இட்டுச் செல்கின்றன. தாம் உழைத்து சம்பாத்தித்த பணத்துடன் வீட்டில் மனைவியும் குழந்தைகளும் வேலை செய்து சம்பாதிக்கும் தொகையையுமே இவர்கள் சாராயம் வாங்கச் செலவழிக்கின்றனர். இந்த அரசியல்வாதிகள் எத்தனை கோடிகள் பணம் சேர்த்தாலும் சேர்த்த பணத்தை அனுபவிக்க அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. நோய் நொடிகள் அவர்களையும் விட்டு வைப்பதில்லை. இவ்வாறு தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாமல் மிருகங்களினும் கேவலமாக உயிர்வாழ்வோர் இழிவானவர்களே.

ஔவையார் சொல்கிறார்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

என்று.

அதாவது தான் நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளைக் கஷ்டப்படும் பிறருக்குக் கொடுத்து உதவுவோர் பெரியார். கொடுக்காமல் எல்லாம் தனக்கென வாழ்வோர் இழிகுலத்தோர் என்கிறார். 

நம் பாரத நாட்டின் பழம் பெரும் காவியங்களில் ஒன்று மஹாபாரதம். அதில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளாவிடினும் அக்காவியம் வாழ்க்கையின் பரிமாணங்களை விளக்கி நமக்குப் பல் நீதி நெறிகளை எடுத்துரைக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். அக்கதையில் குந்திதேவி எனும்ஒரு இளம் பருவப்பெண் துருவாச மகரிஷி தங்கள் அரண்மனைக்கு வரும் போது அவருக்கு மிகுந்த பக்தியுடன் விருந்தோம்பலைச் செய்யவே மனம் மகிழ்ந்த மகரிஷி அவளுக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறார். அம்மந்திரத்தைக் கூறி அவள் எந்த தெய்வத்தை அழைத்தாலும் அத்தெய்வம் பிரத்தியக்ஷமாகித் தன் அம்சமுள்ள புத்திர்ப்பேற்றை அவளுக்குக் கொடுக்கும் என ஆசீர்வதிக்கிறார். அவள் அம்மந்திரத்தை சோதித்துப் பார்க்கும் ஆவலில் வானத்தில் பிரகாசிக்கும் சூரிய பகவானை நோக்கி அம்மந்திரத்தை உச்சரிக்கவே சூரியன் வந்து அவளுக்குஒரு ஆண் பிள்ளையைக் கொடுக்கிறான். பிள்ளையைப் பெற்றெடுத்த குந்திதேவி பழிக்கஞ்சி அக்குழந்தையை அழகிய ஒரு பேழையில் வைத்து மூடி நதியில் விட்டு விடுகிறாள். குழந்தையை திருதராஷ்டிர மன்னனின் தேரோட்டி எடுத்து கர்ணன் எனப் பெயர் சூட்டி வளர்க்கிறான். கர்ணன் பெரிய வீரனாக வளர்ந்த போதிலும் அவன் ஒருதேரோட்டி மகன் ஆனதால் அருஜ்ஜுனனுடன் சமமாக யுத்தம் செய்ய யோக்கியதையற்றவன் என பீஷ்மரும், துரோணரும், பாண்டவர்களும் அவனை அவமதிக்கையில் திருதராஷ்டிர மன்னனின் மகன் துரியோதனன் கர்ணனைத் தான் அங்கேயே அங்க தேசத்து அரசனாக முடி சூட்டி வைக்கிறான். அவையினரின் மத்தியில் தான் பட்ட அவமானத்தைத் துடைத்து கௌரவம் கொடுத்த துரியோதனனிடம் கர்ணன் நட்புக் கொள்கிறான். இடையில் கர்ணன் வேறொரு சிற்றரசனின் மகளை சந்தித்துக் காதல் கொள்ளவே துரியோதனனும் அவன் மனைவியும் அச்சிற்றரசனைக் கண்டு அவன் பெண்ணைக் கர்ணனுக்கு மண முடிக்கின்றனர். கர்ணன் ஒரு தேரோட்டி மகன் எனத் தெரிய வரவும் பெண்ணைக் கொடுத்த சிற்றரசன் தன் பெண்ணைக் கணவன் வீட்டுக்கு அனுப்பாமல் கர்ணனை அவன் குலத்தைச் சொல்லி அவமானப் படுத்துகிறான். மனம் புண்ணாகித் தன் அரண்மனைக்குத் திரும்பும் கர்ணனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, அங்கே அவன் மனைவி வந்திருக்கிறாள். அவள் அவன் மனதைத் தேற்றி அவன்ஒரு கொடையாளி, எனவே பிறரை விட மேலானவன், வீரமானவன் என அவனது மனதில் இருக்கும் சோகத்தை மாற்றுகிற வகையில் அமைந்த பாடல் இன்றைய பாடலாக அமைகிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்

எனும் மஹாகவி பாரதியாரின் உணர்ச்சி மிகும் அறிவுரைகளை செவி மடுப்போம். சாதிச் சண்டையை ஒழிப்போம். சாதி மதச் சண்டையை வளர்த்து அரசியல் ஆதாயம் தேடும் தருக்கர் கூட்ட்டத்தைத் தமிழகத்தில் கால் பதிய வைக்க மாட்டோம் எனும் உறுதியுடன் தமிழ் மக்கள் யாவரும் ஒன்று பட்டு வாழ்வோம், உயர்வோம், நாட்டை உயர்த்துவோம். தமிழனென்று சொல்லித் தலை நிமிர்ந்து நிற்போம்.


திரைப்படம்: கர்ணன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: P. சுசீலா

கண்ணுக்கு குலமேது?
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது? 
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா?
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா? விளக்குக்கு இருளேது?

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

பாலினில் இருந்தே ஆ..ஆ..ஆ..ஆ..
பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்?

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

கொடுப்பவர் எல்லாம் ஆ..ஆ..ஆ..ஆ..
கொடுப்பவர் எல்லாம் மேலாவர் கையில்
கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

வியாழன், 25 பிப்ரவரி, 2016

அன்னையின் அருளே வா வா வா

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 14, 2015

சோழ வள நாடு சோறுடைத்து எனும் பெருமை கொண்ட சோழநாட்டைக் குலோத்துங்க மன்னன் ஆண்ட காலத்தில் அந்நாட்டின் அம்பர் எனும் ஊரிலே சிலம்பி எனும் பெயர் கொண்ட தாசி ஒருத்தி வசித்து வந்தாள். விதிவ்சத்தால் அவள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ நேரிட்டது. அச்சமயம் குலோத்துங்க சோழ மகாராஜாவின் அவைக்களப் புலவராகக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இருந்தார். கம்பர் தனக்கு ஆயிரம் பொன் கொடுப்போர் யாராயினும் அவர் மேல்ஒரு பாடல் இயற்றிப் பாடுவது வழக்கமாயிருந்தது. அவ்வாறு அவர் வாயால் பாடல் பெற்றவர்கள் பெரும் செல்வந்தர்களாகிச் சிறப்பாக வாழ்ந்தனர் என்பதும் அக்காலத்தில் பிரசித்தம். 

இதனைக் கேள்விப்பட்ட சிலம்பி அரும்பாடு பட்டுச் சிறுகச் சிறுக ஐந்நூறு பொற்காசுகளைச் சேர்த்த நிலையில் ஒருநாள் கம்பர் அவள் வீடிருக்கும் வழியே வந்து கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டுத் தான் சேர்த்து வைத்திருந்த ஐந்நூறு பொற்காசுகளைக் கம்பரிடம் தந்து தன் ஏழ்மை நிலையைக் கூறித் தான் ஆயிரம் பொன் கொடுக்க இயலாது எனவும் தயை கூர்ந்து தன் ஏழ்மை நீங்கப் பாட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டாள். ஐந்நூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தான் முழுப்பாட்டு, ஐந்நூறு பொன்னுக்கு அரைப்பாட்டே இயற்ற முடியும் என்று கூறி சிலம்பி வீட்டுச் சுவற்றில் ஒரு கரித்துண்டால் கீழ்க்கண்டவாறு எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்.

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே"

கையிலிருந்த ஐந்நூறு பொன்னும் போய்ப் பாடலும் பூர்த்தியாகாத நிலையில் சிலம்பி மேலும் ஏழ்மையுற்றுப் பெரிதும் வாடினாள். இந்நிலையில் ஒரு நாள் அவள் வீட்டு வழியே கால்நடையாய் வந்த ஔவை மூதாட்டி சிலம்பியின் வீட்டுத் திண்ணையில் சற்றே இளைப்பார வேண்டி அமர்ந்தார். அக்காலத்தில் தொடங்கி சமீப காலம் வரையிலும் அனேகமாக எல்லா ஊர்களிலும் வீடுகளின் முன்னர் திண்ணை ஒன்றைக் கட்டி வைப்பது வழக்கம். வழிப்போக்கர்கள் இளைப்பாறிவிட்டுச் செல்லட்டும் எனும் நல்ல நோக்கில் அவ்வாறு அமைத்தார்கள் மக்கள். அது மட்டுமின்றி எவரேனும் வழிப்போக்கர்கள் தம் வீட்டுத் திண்ணையில் அமர நேர்ந்தால் அவர்களுக்கு தாகம் தீரவும் பசியாறவும், நீராகாரமும் அன்னமும் இட்டு உபசரிப்பதைத் தமிழர்கள் தம் முதற் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார்கள். அதன் பொருட்டே திருவள்ளுவர்

விருந்து புறத்ததாற் தானுண்டாற் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

என்று விருந்தோம்பலின் மகிமையை உலகுக்குணர்த்தும் வண்ணம் எழுதிவைத்தார். அவரது அறிவுரையை அனைவரும் தவறாது கடைபிடித்து நேர்மையாய் பரோபகார சிந்தையுடன் வாழ்ந்தனர்.

தன் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்த ஔவை மூதாட்டி பசிதீர வேண்டுமெனும் எண்ணம் கொண்ட சிலம்பி தான் அருந்துவதற்காக வைத்திருந்த கூழை ஔவையாருக்கு அளித்துப் பருக வேண்டினள். அவளது தயையைக் கண்டு மகிழ்ந்து அவள் கொடுத்த குழை அருந்திய ஔவை எதேச்சையாக அங்கே சுவற்றில் எழுதியிருந்த இரு வரிகளைக் கண்டு அது என்னவென்று சிலம்பியைக் கேட்க சிலம்பியும் நடந்ததை விளக்கிக் கூறினாள். சிலம்பி மேல் கருணை கொண்ட ஔவைப் பிராட்டி ஒரு கரித்துண்டைக் கையில் எடுத்துக் கடைசி இரண்டு வரிகளை எழுதி அப்பாடலைப் பூர்த்தி செய்தார்.

தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும் 
செம்பொற் சிலம்பே சிலம்பு.

எனப் பாடல் முற்றுப் பெற்றதனால் சிலம்பி பெரும் புகழ் பெற்றுச் செல்வச் சீமாட்டியானாள் என்பது கதை.

சோழ நாட்டை ஆண்ட மன்னனின் கருணைக்குக் காவேரி நதியை இணையாகக் கூறினார் கம்பர். அத்தகைய காவேரி நதி தற்போது அரசியல் சாக்க்டைச் சண்டையில் மாட்டிக்கொண்டு அல்லல் படும் கோலத்தை எண்ணி எண்ணி இதயம் நோகிறது. ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் காவேரி நீருக்காக ஏங்குவதும். கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதும், தமிழக அரசு உச்ச நீதி மன்றம் சென்று வழக்குத் தொடர்ந்தும் உண்ணாவிரதங்கள் இருந்தும் போராடுவதும் என நடக்கும் நாடகத்தால் பாசனத்துக்கு நீரின்றித் தவிக்கும் விவசாயிகள் மனம் நொந்து பேதலிக்கும் நிலைமையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டை ஆண்டுவந்த இரு கட்சியினரும் தாம் மட்டுமே காவேரி நதி நீர் பெற்றுத் தரப் பாடு பட்டதாகவும் எதிர்க் கட்சியினர் வேஷம் போடுவதாகவும் ஆண்டாண்டு தோரும் நடைபெறும் ஒரு கூத்தும் சலித்து விட்டது.

காவேரி நதியில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அடை மழையுடன் கூடி வெள்ளம் பெருகி ஓடுவது வழக்கம். அதனால் ஆடி 18ஆம் நாள் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு எனும் பண்டிகையைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடிக் காவேரி நதியில் சென்ரு நீராடுவதும் வழிபாடு செய்வதும் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கைக் காணவில்லை, காரணம் காவேரி நீரைத் தமிழகத்துத் தராமல் கர்நாடக மாநிலத்தார் பெரும்பாலும் தாங்களே உபயோகம் செய்யும் வண்ணம் பல ஏற்பாடுகளைச் செய்ததேயாகும். தற்போதும் காவேரி நதியைத் தேக்கி வைக்கப் புதியதொரு அணை கட்டக் கர்நாடக மாநிலத்தில் மும்முரமாக ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் முன்னணி நடிகர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்குக் கர்நாடகாவிலிருந்து வரும் காவேரி நீரில் கழிவு நீர் மிகவும் அதிகமான அளவில் கலக்கப் பட்டு வருவதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இது வேண்டுமென்றே செய்ததா அல்லது அந்த அளவுக்குக் கர்நாடக மாநிலம் அசுத்தமாகிவிட்டதா எனச் சிந்திக்கத் தோன்றுகிறது, காரணம் சமீப காலத்தில் கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் பல ஏரிகளில் கழிவு நீர்க் கலப்பால் நுரை பொங்கி சுற்றுப்புறச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதே ஆகும்.

வான் பொய்த்தாலும் தான் பொய்யா வற்றாக் கருணை காவேரி எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் தருவாளா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.


திரைப்படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: ஏ.எம். ராஜா
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

அன்னையின் அருளே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா
 ஆடிப் பெருக்கே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா 
பொன்னிப் புனலே வா வா வா
 பொங்கும் பாலே வா வா வா 

அன்னையின் அருளே வா வா வா 

குடகில் ஊற்றுக் கண்ணாகி
 குலத்தைக் காக்கும் பெண்ணாகி
 குடகில் ஊற்றுக் கண்ணாகி
 குலத்தைக் காக்கும் பெண்ணாகி
 கண்ணன் பாடி அணை தாண்டி
 கார்முகில் வண்ணனை வலம் வந்து 

அன்னையின் அருளே வா வா வா 

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
 தேனாய்ப் பெருகும் தமிழே வா
 திருவாய் மொழியாம் நாலாயிரமும்
 தேனாய்ப் பெருகும் தமிழே வா
 திருமால் தனக்கே மாலையாகி
 திருவரங்கம் தனை வலம் வரும் தாயே 

அன்னையின் அருளே வா வா வா 

கட்டிக் கரும்பின் சுவையும் நீ
 கம்பன் கவிதை நயமும் நீ
 கட்டிக் கரும்பின் சுவையும் நீ
 கம்பன் கவிதை நயமும் நீ
 முத்துத் தாண்டவர் பாடலிலே
 முழங்கும் பக்திப் பெருக்கும் நீ 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
 வற்றாக் கருணை காவேரி
 வான் பொய்த்தாலும் தான் பொய்யா
 வற்றாக் கருணை காவேரி
 வளநாடாக்கும் தாயே நீ
 வாழிய வாழிய பல்லாண்டு  

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சட்டி சுட்டதடா கை விட்டதடா

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 13, 2015

ஆசை கோபம் களவு கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம் என்றான் கவிஞன் கண்ணதாசன். அதை மெய்ப்பிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் சமீபத்தில் பெருமழையால் விளைந்த சேதங்களும் அதனைத் தொடர்ந்து பல மனிதர்களின் நடவடிக்கைகளும் அமைந்திருந்ததை அனைவரும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். எங்கும் ஒரு சிறு துளி நிலத்தையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு பல அரசியல்வாதிகளும், வியாபார நிறுவனங்களும், கல்லூரி நிர்வாகங்களும், வீடு கட்ட விரும்பும் பொது மக்களும் எனப் பாகுபாடின்றி ஆக்கிரமிப்புச் செய்தனர். மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைத்து வெயில் காலத்தில் நிலத்தடி நீரைக் காப்பாற்றித் தரும் பல ஏரிகளையும் மரங்கள் வளர்ந்து விவசாயம் செய்துவந்த பல நிலங்களையும் ப்ளாட் போட்டு விற்றுப் பெரும் செல்வந்தரானோர் பலருளர். அதில் அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் திருட்டுத்தனமாகப் போலி ஆவணங்கள் தயாரித்துத் தனியார் வசமாக்கிய மோசடிகள் பலவுண்டு என்பதை அனைவரும் அறிவர். சாக்கடை போடவென்று ஒதுக்கப்பட்ட அரசு நிதியைச் சென்னை மாநகராட்சியின் மாண்பு மிகு கவுன்சிலர்கள் பலர் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று சாக்கடை போடாமலே போட்டதாகக் கணக்குக் காட்டி நகைகளும் பல்வேறு சொத்துக்களும் வாங்கிக் குவித்துக் கோடீஸ்வரர்கள் ஆயினர் என்பதும் உலகறிந்த ரகசியமாகும். தெருக்களில் குப்பைகள் கொட்டிக் கிடக்க அவற்றை அவ்வப்பொழுது அள்ளி எரியாமல் வீடுகளின் முன் 
குவித்து வைத்து வீட்டுச் சொந்தக் காரர்களை மிரட்டியும் பயமுறுத்தியும் பணம் சம்பாதித்த பல கவுன்சிலர்கள் கதையும் தமிழ்நாடு அறியும்.

பேராசை பெருநஷ்டம் எனும் பழமொழிக்கேற்ப சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்தோடி வெள்ளம் வடியப் பல நாட்கள் ஆன நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. ஏரிகள் மூடப்பட்டதல் செல்ல இடமின்றி வெள்ள நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து நிரம்பவே பல கட்டிடங்கள் முதல் தளம் முழுவதும் மழை நீரில் மூழ்கி மக்கள் யாவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.  சாக்கடைகள் போடப்படாததால் சாக்கடைகளில் செல்ல வேண்டிய கழிவு நீரும் மழை நீருடன் சேர்ந்து கொண்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்களிலும் வீடுகளுக்குள்ளும் புகுந்து நிரம்பி ஊரே சாக்கடைக் கோலம் பூண்டு ஊழித் தாண்டவம் புரிந்த கொடுமைகளை நேரில் கண்டவரே உணரக்கூடும். தொலைக்காட்சிகளிலும் இணைய தளங்களிலும் வேடிக்கை பார்த்துத் தெரிந்து கொண்ட நம்மைப் போன்ற பலரும் வெள்ளத்தால் விளைந்த துன்பங்களை முழுமையாக உணர இயலாது என்பதே உண்மை.

உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பது போல் பேராசைப் பட்டு நிலங்களை ஆக்கிரமித்து சொத்து சேர்க்கும் ஆசையில் தகாத முறையில் ஆக்கிரமிப்பு செய்த பலரும் இன்று வீடிழந்து கையில் உள்ள பொருளிழந்து செய்து வந்த தொழில் இழந்து, பெரு மூலதனத்தில் செய்து வந்த வியாபாரங்கள் அழிந்து அவதிப் படுகின்றனர் என்பது கண்கூடு. அரசியல்வாதிகள் இது நாள் வரை பொய் சொல்லி நடத்தி வந்த நாடகங்கள் யாவும் மழை நீரில் நீலச்சாயம் பூசி வந்த நரி நனைந்த போது வெளியானது போல் வெளியாகியது ஒரு தெய்வச் செயல் என்றே சொல்லலாம். தெய்வ நம்பிக்கை இல்லாதோரும் நம்பும் விதமாக வந்துற்றது இப்பேரழிவு.

சுயநலம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த பல செல்வந்தர்களும் ஏழைகள் போலாயினர். அவர்களுக்கு உயிர்ப்பிச்சை தந்தவர் வெகு சாமான்ய மக்களே எனக் கண்டபோது அவர்களது அறிவுக் கண் திறந்ததென்றே கொள்ளலாம். அரசு இயந்திரங்கள் முடங்கிப்போன நிலையில் அரசு நடத்தும் சாராய வியாபாரம்மட்டும் நிற்காமல் நடந்தது ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்தாற் போல் இருந்தது. 

பொது மக்கள் தாங்களாகவே சென்று பலருக்கும் உதவிகள் புரிந்து ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்கப் பாடுபட்டனர்.  நமக்கு நாமே திட்டம் என்று நாட்டைக் கொள்ளையடித்த சில அரசியல்வாதிகளுன் சுயரூபத்தை மக்கள் கண்டு கொண்டார்கள்.

இனியாகிலும் நேர்மையான அரசியல் தமிழ்நாடில் நிலவ மக்கள் வழிவகை செய்வார்களா? பொதுநல நோக்குடன் தம் இன்னுயிரையும் துச்சமாக மதித்து வெள்ள நீரில் இறங்கியும் படகுகள் விட்டும் பல 

மக்களின் இன்னுயிரைக் காத்து, உணவும் உடையும் பெற்றுத் தந்து ஊட்டி உயிர் காத்த தமிழ் இளைய தலைமுறையினர கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து அவர்களை வழிநடத்தி தமிழ்நாட்டில் நல்லாட்சி நிலைபெறச் செய்வாரக்ளா?

அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என்று புதுப் புதுப் பெயர்களால் பழைய சுரண்டல் அரசியல்வாதிகள் பலர் அமைக்கும் கூட்டணிகள் கண்டு ஏமாறாமல் புதிய நல்வழியைக் கண்போம். இளைஞர்கள் கையில் எதிர்காலத்தை நம்பி ஒப்படைப்போம். அவர்கள் அன்புடையவர்கள், அறிவுடையவர்கள், திறமையுடையவர்கள், மக்களைப் பெரிதும் மதித்து நடப்பவர்கள், நாணயமானவர்கள்.

இளைய தலைமுறையை வரவேற்போம்! எதிர்காலத்தை வளமானதாக அமைப்போம், நேர்மையைக் கடிபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வெறும் வாய் ஜாலம் செய்து மானம் மரியாதை 

அனைத்தையும் இழந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது மக்களை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துப் பெரும் பணம் சேர்ப்போம் எனும் சுயநல நோக்குடையோரை விரட்டியடிப்போம்.


இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா 
நாலும் நடந்து முடிந்த பின்னால்
 நல்லது கெட்டது தெரிந்ததடா 

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா 

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா 

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா 

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா 
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா மனம் 
சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா 

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா